தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும்

விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

அனுபமா சுப்ரமணியன்: ஒரு வதந்தி நிலவுகிறதே! டைரக்டர் அமீர் தான் உங்களின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் அவர்தான் உங்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று இஸ்லாத்துக்கு மாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறதே!

யுவன் சங்கர்: (பலமாக சிரிக்கிறார்) நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்கள். என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. இது அவரவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். உங்களின் உள் மனதில் இறை நம்பிக்கையில் ஏற்படும் சில மாற்றங்களே தற்போது என்னுள் நடந்துள்ளது. இது தான் உண்மையும் கூட.




அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?

யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.

அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!

யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.

அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

யுவன் சங்கர்: இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர். இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன். தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.

அனுபமா சுப்ரமணியம்: 'யுவன் சங்கர் ராஜா' என்ற உங்களின் இந்த பெயரும் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?

யுவன் சங்கர்: இது பற்றிய செய்தியை விரைவிலேயே வெளியிடுவேன்.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

ஆம். இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் 'இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.

வாளால் இஸ்லாம் உலகமெங்கும் பரப்பப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு 'எது வேண்டும?' என்று ஒளரங்கஜேப் கேட்டதாக நமது வரலாற்று புத்தகங்களில் ஏகத்துக்கும் கதை அளந்திருப்பார்கள். அந்த கதைகள் அனைத்தும் கற்பனைளே என்பதற்கு இந்த பேட்டி மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

--------------------------------------------------------

ஹூஸைனீ எனும் அன்ஸாரீ ஒருவருக்கு கிறிஸ்தவர்களான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் தொடர்ந்தும் இருக்கப் போவதாக பிடிவாதமாக இருந்தனர். எனவே, அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவ நிர்ப்பந்திக் கட்டுமா என நபி அவர்களிடம் அவர் வினவியபோது நபியவர்கள் அவரைத் தடுத்தார்கள்.அப்போது இந்த வசனம் இறக்கப்பட்டது.

“மார்க்கத்தில் பலவந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழியானது தெளிவாகிவிட்டது”
குர்ஆன்: (2:256)

எனவே எவரையும் அவரின் வறுமையையும், சிரமத்தையும், இயலாமையையும் காரணமாக்கி அதன் மூலம் வலுக்கட்டாயமாக எவரையும் இஸ்லாத்தில் இணைக்க முற்படுவது குர்ஆனின் கட்டளைக்கே மாற்றமானது என்பதை விளங்குகிறோம். இதன்படி மொகலாயர்கள் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்தக் கொள்வதற்காக தினம் பொரிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மத மாற்றம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை அதை அவர்கள் விரும்பவும் இல்லை என்பதை விளங்குகிறோம்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts