இறைச்சிக்காக
மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்யக் கோரி கண்டி தலதா மாளிகை முன்
தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட பௌத்த பிக்குவின் இறுதிச் சடங்கில்
வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
கஹவத்தை பிரதேசத்தில் போறம்பே விகாரையில் வசித்து வந்த போவத்த இந்திரரத்ன
தேரர் என்ற பௌத்த பிக்கு, ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் உள்ளூராட்சித்
தேர்தலில் போட்டியிட்டு பெல்மதுளை பிரதேசசபைக்குத் தெரிவு
செய்யப்பட்டிருந்தார். எனினும் அவர் கூட்டங்களில் பங்கேற்காதால் தனது
ஆசனத்தை பறிகொடுத்திருந்தார்.
இறந்த பிக்கு சிஹல ராவயவின் தீவிர செயற்பாட்டாளர் என்பதுடன் அம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகள் வெட்டுவதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி
இவர் வெசாக் நாளன்று தலதா மாளிகை அருகே தீக்குளித்தார். படுகாயமடைந்த அவர்
கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், சனிக்கிழமை
மரணமானார். அவரது இறுதிச்சடங்குகள் நாளை மறுநாள் கஹவத்தையில் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது இறுதிச்சடங்கை
கொழும்பிலேயே நடத்த வேண்டும் என்றும், இறைச்சிக்காக கால்நடைகள் வெட்டுவதை
உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் கோரி சிஹல ராவய என்ற அமைப்பைச் சேர்ந்த
பெளத்த பிக்குகள் உள்ளிட்டோர் நேற்று அலரிமாளிகை நோக்கி ஆவேசமான பேரணி
ஒன்றை நடத்தினர். அவர்களை கொள்ளுப்பிட்டி சந்தியில் காவல்துறையினர் தடுத்த
போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர்
சிலர் காயமடைந்தனர்.
இந்த எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய சிஹல
ராவய அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர், அலரி மாளிகையிலிருந்து பதில்
கிடைக்கவில்லை என்றும் இன்னும் பிக்குகள் தீக்குளிக்க வேண்டும் என்று தான்
அவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். இனி தாங்கள்
செத்தால் இன்னும் பலரையும் சேர்த்துக் கொண்டு தான் மரணிப்போம் என்றும் அவர்
எச்சரித்தார்.
இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிய சிஹல ராவயவின்
தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும் பௌத்த பிக்குகளால் காவல்துறை
அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டனர்.
கொழும்பில் இறுதிச்சடங்கை
நடத்தினால் அதைப் பயன்படுத்தி ஏனைய இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்
கட்டவிழ்த்து விடப்படலாம் என்பதாலேயே அரசாங்கம் இரகசியமாக நீதிமன்ற
உத்தரவைப் பெற்று இரத்தினபுரியில இறுதிச்சடங்கை நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இறந்த தேரரின் உடல் சிறப்பு அதிரடிப்படையின்
பாதுகாப்புடன் நேற்றுக்காலையே இரத்தினபுரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது இறுதிச்சடங்கு கஹவத்தையில் உள்ள பொறனுவ பாடசாலை மைதானத்தில்
இடம்பெறவுள்ளது.
இதன் போது வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால்,
பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இறுதி கிரியைகளின்
போது விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்: