கிளர்ச்சியாளர்களை
நாற்புறமும் சூழ்ந்து தமது கை ஓங்கியிருக்கும் வேளையில், அதுவும்
அமெரிக்கா போன்ற நாடுகள் தம் மீது தாக்குதல் நடத்த காரணம் தேடும் வேளையில்
இரசாயன தாக்குதல் நடாத்துவதற்கு சிரிய அரசாங்கத்துக்கு புத்தி
பேதலிக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அமெரிக்கா ஆதாரத்தை முன்
வைக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புட்டின்.
இன்றைய தினம் ஐ.நா ஆய்வாளர்கள் சிரியாவை விட்டு வெளியேறி லெபனானை
சென்றடைந்திருக்கும் இவ்வேளையில் அமெரிக்காவின் யுத்த தொனி
அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோதே ரஷ்ய அதிபர்
இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
சிரியா மீதான இராணுவ நடவடிக்கையில்
ஐக்கிய இராச்சியம் பங்கேற்க மாட்டாது எனும் நிலையில், பிரான்சில்
நடாத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்பொன்றிலும் 64 வீதமான மக்கள் இராணுவ
நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். ஜெர்மனி ஏலவே தாம் இராணுவ
நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என அறிவித்திருந்த போதும் அமெரிக்க,
பிரான்ஸ் அரசுகளுக்கு நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்றி நேரடியாக போருக்கு
செல்லும் அதிகாரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா
பாதுகாப்பு கவுன்சில் ஊடாக இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்ள ஏற்கனவே
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட முயற்சியை ரஷ்யாவும், சீனாவும்
எதிர்த்திருந்த போதும் இரசாயன தாக்குதல் எனும் போர்வையில் போர்
தொடுப்பதற்கே அமெரிக்கா தயாராகி வருகின்றது.
வழமை போலவே தாம்
எதிர்த்து நிற்போம் என சிரியா கூறுகிறது. எனினும், தரை யுத்தமொன்றில் ஈரான்
மற்றும் ஹிஸ்புல்லா ஆதரவு கிடைக்கப்பெறினும் கூட வான் யுத்தத்தை
சமாளிக்கும் வகையில் ரஷ்யா இறுதி வரை ஒத்துழைப்பு வழங்குமா என்பதை
பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்நிலையில், யுத்தம் ஒன்று
மூழ்கையில் சவுதி அரேபியா தாக்கப்படக்கூடும் எனும் அச்சம் மேலோங்கி
நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 கருத்துகள்: