ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வரப் போகின்றார் என்றதும் அவர் வர சிறிது நாற்களுக்கு முன் தமது வாய்களை மூடி மௌனம் காத்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்ட பாதுகாப்பு செலாளர் கோத்தபய ராஜபக்ஷ, அமைச்சர் சம்பிக்க ரணவக்க,அமைச்சர் விமல் வீரவன்ஸ,பொது பல சேனாவின் தலைவர் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர்

தற்போது தமது வாய்களை மூடிவைத்திருந்ததால் படிந்திருந்த ஒட்டடைகளை தட்டிவிட்டுக் கொண்டு தற்போது மீண்டும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு எதிரான துர்நாற்றம் கலந்த விஷங்களை கக்கத் தொடங்கியுள்ளனர். இதில் அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை குறி வைப்பதை பொறுப்பேற்றுள்ளனர்.

ஞானசாரவும் அவரது குருநாதரும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கத் தொடங்கியுள்ளனர். ஞானசாரவின் குருநாதர் அவருக்கே உரிய பாதுகாப்பு கருத்தரங்கு என்ற வருடாந்த கேலிக்கூத்து அரங்கைப் பயன்படுத்தி உள்ளார். ஞானசாரர் தன்னுடைய மட்டத்தில் உள்ளுர் ஊடகவிலாளர் மாநாட்டைப் பயன்படுத்தி உள்ளார்.

ஞானசாரரின் இன்றைய முழுநேர பணியே முஸ்லிம்களுக்கு எதிராக புதுப்புது குற்றச்சாட்டுக்களை கண்டுபிடிப்பதும,எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை எப்படி முஸ்லிம்கள் தலையில் போடலாம் என்று யோசிப்பதும் தான்.இந்த கண்டுபிடிப்பும் யோசனையும் அதிகரிக்க அதிகரிக்க அவர் ஒரு மடையர் என்பதும் தௌ;ளத் தெளிவாக நிரூபணம் ஆகிக் கொண்டே செல்கின்றது. முஸ்லிம் சமூகம் இவரை தற்போது ஒரு விஷம் கக்கும் கோமாளியாக நினைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டது. இவரைக் கண்டாலே முஸ்லிம் புத்தி ஜீவிகளுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை என்ற நிலைக்கு நாட்டின் நம்பர் வன் கோமாளியாகிவிட்டார்.

இந்த கோமாளி தேரர் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருமளவு போதைப் பொருள் கடத்தலில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களால் தான் இது கொண்டுவரப்பட்டுள்ளது என்பதாகும். இந்த போதைப் பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அதை யார் செய்திருந்தாலும் அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. இது சம்பந்தமான ஆரம்ப கட்ட விசாரணைகள் தான் பூர்த்தி அடைந்துள்ளன. அதில் இந்த போதைப் பொருள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளுர் முகவர்கள் யார்? இதை ஒரு நிறுவனம் கொண்டு வந்ததா?

அல்லது தனிநபர் ஒருவர் கொண்டு வந்தாரா? லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த கொள்கலன்களை விடுவிக்க தயாராக இருந்த சுங்க அதிகாரி யார்? இது உள்ளுர் சந்தையின் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது இங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு வரப்பட்டதா? இவை இன்னும் விடை காணப்படாத முக்கிய கேள்விகள்.

பாகிஸ்தானில் இருந்து விசாரணையாளர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.அவர்களும் உள்ளுர் அதிகாரிகளும் இணைந்து நடத்தும் விரிவான விசாரணைகளின் பின்னர் தான் உண்மை நிலைமைகள் தெரியவரும்.

அந்த உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகள் யார்? என்பதை தெரிந்து கொள்ள முஸ்லிம் சமூகமும் ஆர்வமாக உள்ளது.ஆனால் அதற்கிடையில் ஞானசாரரும் சம்பிக்க ரணவக்கவும் ஏன் முந்திரிக் கொட்டைகள் போல் இந்த விடயத்தில் மூக்கை நுழைத்து இனத் துவேஷ கருத்துக்களை வெளியிட்டு விசாரணையாளர்களின் கவனத்தை திசை திருப்ப முயலுகின்றார்கள்?

அப்படியானால் இவர்கள் இருவரும் உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனரா? என்ற ஒரு நியாயமான சந்தேகமும் இங்கே எழுகின்றது. இரு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு உயர் மட்ட விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன் அதுபற்றி இரண்டு தனிநபர்கள் எப்படி தமது கருத்துக்களை கூறலாம்? பாகிஸ்தானில் இருந்து ஒரு பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதற்காக அதை உள்ளுரில் கொண்டு வந்தவர் அல்லது கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்ற முடிவுக்கு வருவது என்ன நியாயம்? பாகிஸ்தானோடு ஏனைய பல வர்த்தகங்களில் ஈடுபடும் பெருமபான்மை இனத்தவர்கள் இந்த நாட்டில் இல்லையா? ஞானசாரர் ஏன் இந்த விடயத்தில் ஞானசூனியமாகிவிட்டார்.

இந்த விடயத்தோடு கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை சம்பந்தப்படுத்தி தன் வாயாலே தனக்கு கேடை தேடிக் கொள்ளும் தவளையின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஞானசூனியர்.இதுபோன்ற போதைப் பொருள்கள் கொண்டு வரப்பட்டு அது கிரேட்ன்பாஸ் பள்ளிவாசலில் வைத்து விற்கப்படுகின்றது. அதனால் தான் மக்கள் அந்தப் பள்ளிவாசலைத் தாக்கினார்கள் என்ற ஒரு புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டுள்ளார் ஞானசூனியர்.

இந்தக் கூற்றின் மூலம் கிரேண்ட்பாஸ் பள்ளிவாசலைத் தாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல.அது நாங்கள்தான் என்பதை அவராகவே முன்வந்து ஒப்புக் கொண்டுள்ளார். தாங்கள் நடத்திய தாக்குதலை எப்படி நியாயப்படுத்துவது என்று வழிதேடிக் கொண்டிருந்த ஞானசூனியர் இப்போது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பள்ளிவாசலும் போதைப் பொருள் விற்பனைக்காக, கள்ள நாணய நோட்டுக்கள் அச்சிடுவதற்காக,கள்ள அரச ஆவணங்கள் தயாரிப்பதற்காக, கொள்ளை கோஷ்டிகளுக்கு இடமளிப்பதற்காக, கொள்ளையிட்ட பொருள்களைப் பதுக்கி வைப்பதற்காக, கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மறைத்து வைப்பதற்காக, புதையல் திருடுவதற்காக, பாலியல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக, பாலியல் திரைப்பட சிடிக்களை பதுக்கி வைப்பதற்காக, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதுற்காக பயன்படுத்தப்பட்டதாக வரலாறே கிடையாது.இவை எல்லாம் எங்கு நடந்துள்ளன என்பதை விவரமாக எடுத்துச் சொல்ல நாம் விரும்பவில்லை. இன்றும் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு இது நன்கு தெரியும். முஸ்லிம் சமூகத்தை நோக்கி ஒட்டு மொத்தமாக விரலை நீட்டுபவர்கள் ஒன்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் நீட்டுவது ஒரு விரலை மட்டும்தான் மற்ற எல்லா விரல்களும் உங்களை நோக்கி தான் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.

இலங்கைக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதில் அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரி,எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரி அவர்கள் சமூகத்துக்கு அடையாளம் காட்டப்பட வேண்டும் அவர்களின் முகத்திறைகள் கிழிக்கப்பட வேண்டும்.சட்டத்தின் முன்னால் எவ்வித பாரபட்சமும் இன்றி அவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படவேண்டும். இந்த நாட்டில் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு அவசரமாகக் கொண்டு வரப்பட்டு இந்த கீழ்த்தரமான அரசியல் வாதிகள் தூக்கு மேடையில் ஏற்றப்பட வேண்டும்.இதற்கு ஆதரவு வழங்க முஸ்லிம் சமூகம் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை.

நீண்ட நாற்களுக்குப் பின் பொலிஸ் திணைக்களம் தனியான ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு சுதந்திரமான ஒரு திணைக்களமாகச் செயற்படுவதாக நாம் நம்புகின்றோம்.

அவர்கள மக்கள் மத்தியில் இழந்துள்ள தமது கௌரவைத்தையும் நம்பிக்கையையும் மீளக் கட்டியெழுப்ப இது ஒரு அருமையான சந்தர்ப்பம். அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை துரிதமாகக் கைது செய்ய வேண்டும்.அதுவரை ஞானசூனியர் தனது திருவாயை மூடி மௌனம் காப்பதுதான் எல்லோருக்குமே நல்லது

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts