சிரியாவில்
அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது கடந்த
21-ந்தேதி ராணுவம் ரசாயன குண்டுகளை (விஷ குண்டுகளை) வீசியது. அதில் 1429
பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடி கொடுக்க சிரியா மீது தாக்குதல்
நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இதற்கு சிரியாவின் நட்பு நாடுகளான
ரஷியா, சீனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே ராணுவ நடவடிக்கையை தவிர்க்க சிரியா தன்னிடம் உள்ள ரசாயன
ஆயுதங்களை சர்வதேச நாடுகள் கண்காணிப்பு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என
ரஷியா யோசனை தெரிவித்தது. அதை சிரியா ஏற்றுக் கொண்டது. இந்த தகவலை சிரியா
மந்திரி வாலித் ஒப்புக் கொண்டார்.
இதை அமெரிக்க அதிபர் ஒபாமாவும்
ஏற்றுக் கொண்டார். ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும் சிரியாவின் இந்த சமாதான
முடிவை பிரான்சு, சீனா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.
இதற்கிடையே
தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கட்சியான ஜனநாயக கட்சி
மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்களை சந்தித்து
பேசினார். அப்போது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது தாக்குதல்
நடத்த வேண்டிய அவசியத்தை விளக்கினார். அதை தொடர்ந்து டெலிவிஷனுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவின் தேசிய
பாதுகாப்பை கருதிதான் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த தீர்மானித்தோம்.
ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்காவிடில் சிரியாவின்
ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பேச்சே
எழுந்திருக்காது. தற்போது ரஷியா, ஐ.நா. சபை மற்றும் நட்பு நாடுகளுடன் ஆன
நல்லுறவுக்கே சிரியா மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
இதை அதிபர் ஆசாத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி
கொண்டு ரசாயன ஆயுதங்களை ஒப்படைப்பதில் தாமதப்படுத்தக் கூடாது. அவ்வாறு
தாமதித்தால் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சிரியா மீது
குறைந்த அளவிலான ராணுவத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படும்.
0 கருத்துகள்: